டிபிஎஸ் வங்கியின் ஹாங்காங் பிரிவுக்கு கிட்டத்தட்ட 1.73 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது ஹாங்காங் நாணய ஆணையம்.
கள்ளப்பணம், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி போன்றவற்றுக்கு எதிரான விதிமுறைகளில் குறைபாடுகள் இருந்ததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீர விசாரித்த பிறகுதான் இந்த முடிவை எடுத்ததாக ஹாங்காங் நாணய ஆணையம் அறிக்கை மூலம் கூறியது.
2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் வங்கியின் கட்டமைப்பில் அந்தக் குறைபாடு இருந்ததாக அறிக்கை குறிப்பிட்டது.
கள்ளப்பணம், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி போன்றவற்றுக்கு எதிராக ஹாங்காங்கின் டிபிஎஸ் பிரிவு எப்போதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் அது தனது கடமையில் இருந்து தவறாது என்றும் வங்கி பேச்சாளர் தெரிவித்தார். மேலும், ஹாங்காங் நாணய ஆணையத்தின் முடிவை மதிப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக ஹாங்காங்கின் டிபிஎஸ் பிரிவு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக புதிய புதிய கொள்கைகளை அறிமுகம் செய்து வருகிறது. கூடுதலாக சந்தேகத்திற்குரிய பணபரிவர்த்தனைகளை கண்காணிக்க கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் வங்கி பேச்சாளர் தெரிவித்தார்.

