மிதிவண்டி வாங்குவதில் ஆர்வமுள்ளவர்கள், ஜூலை மாதம் 4, 5 ஆம் தேதிகளில் நடைபெறும் டிகாத்லானின் ‘சர்குலர் பஜார்’ நிகழ்வில், அதன் அசல் விலையிலிருந்து 80 விழுக்காடு வரையிலான அதிரடித் தள்ளுபடி விலையில் மறுசீரமைக்கப்பட்ட மிதிவண்டிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
நான்காவது முறையாக நடத்தப்படும் இந்தத் திருவிழா, இம்முறை காலாங்கில் உள்ள சிங்கப்பூர் லேப் மற்றும் நார்த்ஷோர் பிளாசா கிளை என இரண்டு இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, முற்றிலும் மிதிவண்டிகளை மட்டுமே மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.
முன்னதாக 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காலாங் கிளையில் நடைபெற்ற முந்தைய நிகழ்வில், டிகாத்லான் நிறுவனத்தின் பளுதூக்கும் கருவிகள், ஸ்கூட்டர்கள், ஸ்கேட்போர்டுகள் மற்றும் குளிர்கால ஆடைகளை வாடிக்கையாளர்கள் கொடுத்து அதற்குப் பதிலாக பொருள் வாங்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
இரு நாள்களிலும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில், பல்வேறு ‘பிராண்டு’களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பயன்படுத்தப்பட்ட மிதிவண்டிகள் விற்பனைக்கு வைக்கப்படும். இதில் டிகாத்லானின் மறுசீரமைக்கப்பட்ட ‘செகண்ட் லைஃப்’ மிதிவண்டிகளுக்கு 80 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.
மேலும், தகுதியுடைய பழைய டிகாத்லான் மிதிவண்டிகளைக் கொண்டு வருபவர்களுக்கு, அதன் வழக்கமான மறுவிற்பனை மதிப்புடன் கூடுதலாக 10 விழுக்காடு ‘பை-பேக் போனஸ்’ தொகையும் வழங்கப்படும்.
மேலும், இந்த நிகழ்வில் புதியதொரு ‘மிதிவண்டி மீட்புத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த சந்தை வளாகத்திற்குள் அனுமதி மற்றும் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்பது முற்றிலும் இலவசம் ஆகும். மிதிவண்டி வாங்க விரும்பாதவர்கள்கூட நேரில் சென்று இந்தத் திருவிழாக் கொண்டாட்டங்களில் தாராளமாகப் பங்கேற்கலாம் என டிகாத்லான் அறிவித்துள்ளது.

