தானா மேராவுக்கும் தெம்பனிசுக்கும் இடையே டிசம்பர் 7 முதல் டிசம்பர் 10 வரை ரயில் சேவை கிடையாது.
அந்தக் காலகட்டத்தில், தற்போதைய கிழக்கு மேற்குப் பாதையிலிருந்து புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பணிமனை வரை தண்டவாள இணைப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதே அதற்குக் காரணம்.
பாதிக்கப்பட்ட பயணிகள், தெம்பனிஸ், சிமெய், தானா மேரா நிலையங்களுக்கு இடையே பயணம் செய்ய, எண் 7 இடைவழிப் பேருந்துச் சேவையைப் பயன்படுத்தலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் ‘எஸ்அம்ஆர்டி’ நிறுவனமும் கூறின.
இடைவழிப் பேருந்துச் சேவை மூன்று முதல் ஐந்து நிமிட இடைவெளியில் செயல்படும். நான்கு நாள்களுக்கும் 55 ஈரடுக்குப் பேருந்துகள் செயல்படுத்தப்படும். பேருந்துக்கான கட்டணமும் அதே பாதையில் செல்லும் ரயில் பயணக் கட்டணமும் சமமாக இருக்கும்.
இடைவழிப் பேருந்துச் சேவை வழியாக, சிமெய், தானா மேரா நிலையங்களுக்கு இடையே பயணம்செய்ய 15 நிமிடங்கள் எடுக்கும்.
சிமெய், தெம்பனிஸ் நிலையங்களுக்கு இடையே பயணம் செய்ய 18 நிமிடங்கள் ஆகும். இருப்பினும், இது போக்குவரத்து நிலைமையைப் பொறுத்துள்ளது.
அதனால், தெம்பனிசுக்கும் தானா மேராவுக்கும் இடையே பயணம் செய்வோர், டௌண்டவுன் பாதையையோ மாற்றுப் பயணப் பாதைகளையோ பயன்படுத்துமாறு ஆணையத்தின் பேச்சாளர் ஆலோனை வழங்கினார்.
மாறாக, பயணிகள் தெம்பனிஸ், எக்ஸ்போ நிலையங்களில் கிழக்கு மேற்குப் பாதையிலிருந்து டௌண்டவுன் பாதைக்கு மாறி, தங்கள் பயணங்களைத் தொடரலாம்.
தொடர்புடைய செய்திகள்
தானா மேரா, தெம்பனிஸ் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை இல்லாதது, கிழக்குப் மேற்குப் பாதையின் சில பகுதிகளைப் பாதிக்கும்.
தெம்பனிஸ், பாசிர் ரிஸ் நிலையங்களுக்கு இடையே ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும், தானா மேரா, எக்ஸ்போ நிலையங்களுக்கு இடையே ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கும், எக்ஸ்போ, சாங்கி ஏர்போர்ட் நிலையங்களுக்கு இடையே ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் இடைவழி ரயில்கள் செயல்படும்.