சிங்கப்பூரின் காய்கறி, கடல் உணவு உற்பத்தி 2024ஆம் ஆண்டில் தொடர்ந்து சரிந்தது.
2030ஆம் ஆண்டுக்குள் உள்ளூர் மக்களின் உணவுத் தேவைகளில் 30 விழுக்காட்டை உற்பத்தி செய்ய சிங்கப்பூர் இலக்கு கொண்டிருந்தது.
ஆனால் இந்தச் சரிவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
2024ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட காய்கறிகளில் 3 விழுக்காடு உள்ளூரில் பயிரிடப்பட்டவை. அதற்கு முந்திய ஆண்டில் இது 3.2 விழுக்காடாக இருந்தது.
கடந்த 2023ஆம் ஆண்டில் உள்ளூர் கடல் உணவு உற்பத்தி 7.3 விழுக்காடாக இருந்தது. அதற்கு அடுத்த ஆண்டில் இது 6.1 விழுக்காடாகக் குறைந்தது.
இந்தத் தகவல்கள் 2024 சிங்கப்பூர் உணவுப் புள்ளிவிவர அறிக்கை மூலம் தெரியவந்துள்ளன. அந்த அறிக்கை வியாழக்கிழமை (ஜூன் 5) வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள மூன்று முட்டை பண்ணைகளில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளது.
சென்ற ஆண்டு சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட முட்டைகளில் 34.4 விழுக்காடு முட்டைகள் உயர் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ள இந்தப் பண்ணைகளிலிருந்து வந்தவை. இதற்கு முன்பு அது 31.9 விழுக்காடாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் 153 நிலப் பண்ணைகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலான பண்ணைகளில் காய்கறிகள் பயிரிடப்பட்டன. ஆனால் 2023ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் 156 நிலப் பண்ணைகள் இருந்தன.
அதுபோல, 2024ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் 72 கடல் பண்ணைகள் இருந்தன. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 98ஆக இருந்தது.
சென்ற ஆண்டு சிங்கப்பூருக்குத் தேவையான உணவுவகைகளில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டவை 10 விழுக்காட்டுக்கும் குறைவு.
சில பிரபலமான பண்ணைகள் மூடப்பட்டதை அடுத்து உள்ளூர்ப் பண்ணைத்துறை இடையூறுகளைச் சந்தித்தது.
இதையடுத்து, இந்தப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.