கிட்டதட்ட 50 வசதி குறைந்தோருக்கும் மூத்தோருக்கும் பலகாரங்கள் கொண்ட அன்பளிப்புப் பையையும் $50 ரொக்கத்தையும் செட்டியார் கோயில் குழுமம் வழங்கியது.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு பிடோக் சமூக மன்றத்திலிருந்து வருகை புரிந்த மக்களுக்கு அக்டோபர் 18ஆம் தேதி அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலில் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
அத்துடன், சுவையான சைவ உணவும் ஆடல்-பாடல் அங்கங்களும் வந்திருந்தவர்களை மகிழ்வித்தன.
ஏழு ஆண்டுகளாக நடைபெறும் இந்த முயற்சி தீபாவளிக்கு மட்டுமல்லாது சீனப் பெருநாள், நோன்புப் பெருநாளின்போதும் நடைபெற்று வருகிறது.
இந்த மக்களை உபசரிப்பது ஒரு கடமை, தங்களுக்குக் கிடைத்த நற்பேறு எனக் கருதுவதாக தெரிவித்தார் செட்டியார் கோயில் குழுமத்தின் தலைவர் காசி சுப்ரமணியம்.
“இந்த நிகழ்ச்சிவழி பண்டிகைக் குதூகலத்துடன் சிங்கப்பூரின் ஒற்றுமை உணர்வையும் பறைசாற்றுகிறோம்,” என்று தெரிவித்தார்.
இவ்வாண்டு ‘எஸ்ஜி60’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கருணைமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தேசத்தை வடிவமைப்பதில் செட்டியார் கோயில் குழுமம் போன்ற சமூக அமைப்புகள் எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை இந்த முயற்சி வெளிப்படுத்துகிறது.
தலைமுறைகள், இனங்களைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் பாலங்களாகப் பண்டிகைகள் செயல்பட வேண்டும். அந்த ஒரு தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக இது போன்ற சிறிய, சமூகக் கொண்டாட்டங்கள் தொடர்கின்றன என்று செட்டியார் கோயில் குழுமம் தெரிவித்தது.