தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்த ஏறத்தாழ 120 குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் $50 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
மார்சிலிங் வட்டாரத்திலுள்ள ஸ்ரீ சிவகிருஷ்ண ஆலயத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 11) நடைபெற்ற இவ்வாண்டுக்கான தீபாவளிப் பரிசு சிறப்பு நலத்திட்டத்தின்கீழ் இந்தப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
தற்காப்பு மூத்த துணையமைச்சரும் மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகருமான ஸாக்கி முகம்மது சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
“பண்டிகைக் காலங்களில் வசதி குறைந்தோரை நினைவுகூர முழுச் சமூகமும் ஒன்று சேரும் வாய்ப்பாக இந்த முயற்சி அமைகிறது” என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, ஆலயத்தின் வெளிப்புறத்தில் நடத்தப்பட்ட தீபாவளி ஒளியூட்டில் திரு ஸாக்கி பங்கேற்றார்.
“சிராங்கூன் சாலையில் உள்ள ஒளியூட்டைவிட இது சிறியதாயினும் மார்சிலிங் சமூகத்தினரிடையே ஒற்றுமை உணர்வைக் கொண்டுவருகிறது,” என்று அவர் கூறினார்.
தீபாவளி ஒளியூட்டு நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும்.
நிகழ்ச்சியில் ஆடல் அங்கங்கள், ருசியான இரவு உணவு ஆகியவை மக்களை மகிழ்வித்தன.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வோர் ஆண்டும் ‘காம்லிங்க் பிளஸ்’, ‘மார்சிலிங் கேர்ஸ்’ போன்ற திட்டங்களால் 1,200க்கும் அதிகமான வட்டாரவாசிகள் பயனடைகின்றனர்.
இந்த முயற்சிகளின் வழி குடும்பங்கள் தொடர்ச்சியான நிதியுதவியையும் சமூக ஆதரவையும் பெறுகின்றன.
பற்றுச்சீட்டுகளைப் பெற்றவர்களில் ஒருவரான 75 வயது பன்னீர்செல்வம், ஓய்வுபெற்ற தமக்கு இந்தப் பற்றுச்சீட்டுகள் அன்றாடச் செலவுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
“தீபாவளி போன்ற பண்டிகை நாளில் அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை,” என்று தெரிவித்தார் பற்றுச்சீட்டு பெற்ற மற்றொரு குடியிருப்பாளர் பாரதா, 75.