பணவீக்கம், அதிகரிக்கும் வர்த்தகச் செலவுகள் ஆகியவற்றால் பல்மருத்துவப் பராமரிப்புச் செலவு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன.
இருப்பினும், பல்மருத்துவ அனுகூலங்கள் அதே வேகத்தில் அதிகரிக்கப்படவில்லை என்று பல ஊழியர்கள் கூறுவதாக மனிதவள நிபுணர்கள் தெரிவித்தனர்.
அதிகரிக்கும் செலவுகளால், சில ஊழியர்கள் பல்மருத்துவப் பராமரிப்புக்கு மேலும் செலவிட வேண்டியுள்ளது. வேறு சிலர் ஜோகூர் பாருவில் உள்ள பல்மருத்துவர்களைச் சென்று பார்க்கின்றனர்.
சிங்கப்பூரர்களில் அதிகமானோர் ஜோகூரில் உள்ள பல்மருத்துவர்களைக் காண்பதாக கடந்த மே மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், அறிக்கை வெளியிட்டது.
அங்குள்ள பல்மருத்துவச் சேவைகளுக்கான செலவு, இங்கு உள்ளதைக் காட்டிலும் மிகக் குறைவு.
அந்த அறிக்கையைத் தொடர்ந்து, இங்கு கிடைக்கும் பல்மருத்துவ அனுகூலங்கள் மறுஆய்வு செய்யப்படவேண்டும் என்று சிங்கப்பூர் பல்மருத்துவச் சங்கம் கேட்டுக்கொண்டது.
சில சிங்கப்பூரர்கள் வெளிநாட்டில் பல்மருத்துவ சிகிச்சையை நாடுவதற்கு, குறிப்பாக, செலவுகள் முக்கியக் காரணமாக இருப்பதால், தொடர் மதிப்பாய்வுக்கும், அரசாங்கச் சலுகைகள், திரும்பக்கொடுக்கும் திட்டங்கள், விதிமுறைக் கட்டமைப்புகள் ஆகியவற்றை மறுஆய்வு செய்வதற்கும் தேவை உள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் டான் தியென் வாங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறினார்.
பல்மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேற்கொண்ட சோதனைகள் காட்டின.