ஜெனிவா: மியான்மாரில் மனித உரிமைகளின் நிலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் மோசமடைந்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) தெரிவித்துள்ளது.
ரோஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிரான அத்துமீறல்கள், சட்டவிரோத அரிய கனிம அகழ்வாராய்ச்சியால் வளரும் பொருளியல் ஆகியவை பொதுமக்களின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டது.
ஓயாத மோதல்கள், இராணுவ வன்முறைகள், அதிகரித்துவரும் ‘மோதல் பொருளியல்” ஆகியவை பொதுமக்களைக் கடுமையாகப் பாதிப்பதாகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இவ்வாண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கை சொன்னது.
2017ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கான ரோஹிங்யா மக்கள் நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதையடுத்து, 2021ஆம் ஆண்டு ஜனநாயக முறைபடி நோபெல் பரிசு பெற்ற மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சியின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக ரோஹிங்யா சமூகம் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் தொடக்கத்தில் மியன்மார் ராணுவம் தேர்தல் ஒன்றை ஏற்பாடு செய்ததை அடுத்து ராணுவத் தலைவர் மின் ஆங் லைன் அதிபரானார்.
வான்வழித் தாக்குதல், தீ வைப்பு, நிவாரணங்களைக் கட்டுப்படுத்தி வைத்தல் போன்றவை மூலம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி ஐந்து ஆண்டுக்கும்மேல் ராணுவம் அவர்களை அடக்கி வைத்திருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் சொன்னது.
2021ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 8,075 குடிமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 1,774 பேர் பெண்கள், 1,074 பேர் குழந்தைகள்.


