சிங்கப்பூரில் ஆடைக் கழிவுகளைக் குறைக்கும் விதமாக சமூக நிறுவனம் ஒன்று பழைய ஆடைகளை நன்கொடையாகப் பெற்றுக்கொள்கின்றது.
பொதுமக்கள் தங்களது பழைய ஆடைகளை நிறுவனத்தின் நன்கொடைப் பெட்டிகளில் போடலாம்.
இந்நிலையில், நன்கொடைப் பெட்டிகளில் இருந்து ஆடைகளைச் சிலர் எடுப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
அண்மையில் ஒரு தம்பதி செங்காங் பகுதியில் உள்ள நன்கொடைப் பெட்டியில் இருந்து ஆடைகளை எடுக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இச்சம்பவம் பிப்ரவரி 15 நள்ளிரவுக்குப் பின் நடந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, நன்கொடை பெட்டிகளை நிர்வாகம் செய்யும் குளூப் (Cloop) நிறுவனம் நன்கொடைப் பெட்டிகளில் இருந்து ஆடைகளை எடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
விழாக் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக அது கூறியது. யாரேனும் நன்கொடைப் பெட்டிகளில் இருந்து ஆடைகளை எடுப்பதைக் கண்டால் உடனடியாக அதன் இணையப் பக்கத்தில் தகவல் கொடுக்குமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
ஆடைகளைத் திருடுவதால் நன்கொடைப் பெட்டிகள் சேதமடைவதாகவும் அது கவலை தெரிவித்தது.