சிலேத்தார் வெஸ்ட் பண்ணையில் மூன்று நாய்களைப் பிடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தது என்று தேசிய வளர்ச்சி துணையமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்துள்ளார்.
விலங்குநல, மருத்துவச் சேவைகள் அமைப்பால் சிலேத்தார் வெஸ்ட் பண்ணையில் மூன்று நாய்கள் அண்மையில் பிடிக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விக்குத் திரு டான் பதிலளித்தார்.
பிடிக்கப்பட்ட நாய்களில் ஒன்று ‘பேபி பாய்’ அல்லது ‘ஃபிலஃபி’ என்றழைக்கப்பட்டது. விலங்குநல, மருத்துவச் சேவைகள், ‘காசஸ் ஃபார் அனிமல்ஸ் சிங்கப்பூர்’ (Causes for Animals Singapore) என்ற விலங்குநல குழுவிடம் ‘பேபி பாய்’ என்ற நாயை ஒப்படைத்த பிறகு அது இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
பிடிக்கப்பட்ட மூன்று நாய்களும் பலமுறை பொதுமக்களைத் துரத்தியதாகவும் கடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டதாய் திரு டான் குறிப்பிட்டார். எனவே, அவற்றை ஊழியர்களின் மேற்பார்வையில் பாதுகாப்பாகப் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.
நாய்களைப் பிடிப்பது தொடர்பில் ஒருங்கிணைந்த விதிமுறைகளை மறுஆய்வு செய்து தகவல் பறிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்த அரசாங்கம் முற்படுகிறது என்றார் திரு டான்.

