அளவுக்கு மீறி மது அருந்திய ஆடவர் தனது லெக்சஸ் காரை துவாஸ் சோதனைச் சாவடி அருகில் வேகமாக ஓட்டிச் சென்றார்.
இதில் சோதனைச் சாவடியில் இருந்த துணைக் காவல் அதிகாரி மீது மோதி அவருக்கு பலத்த காயம் ஏற்படுத்தியதன் விளைவாக அந்த துணைக் காவல் அதிகாரி தற்பொழுது முற்றிலும் செயலிழந்த நிலையில் உள்ளார்.
யூங் கோக் காய் என்ற அந்த 44 வயது ஆடவர் மார்ச் மாதம், 2023ஆம் ஆண்டு சவுத் பிரிட்ஜ் சாலையிலிருந்து தமது வீடு இருக்கும் ஈசூனுக்கு வாகனத்தை ஓட்டிச் செல்வதாக இருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், எப்படியோ, எவ்விதக் காரணமும் இன்றி துவாஸ் சோதனைச் சாவடி பக்கம் சென்றுள்ளார் என்று அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
வியாழக்கிழமை (பிப்ரவரி 27ஆம் தேதி) மது போதையில் தனது வாகனத்தை ஆபத்தான முறையில் வேகமாக ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கிய துணைக் காவல் அதிகாரிக்கு வேண்டுமென்றே கடுமையான காயம் விளைவித்த குற்றத்தை யூங் ஒப்புக்கொண்டார்.
இங் யி ஷு என்ற அந்த துணைக் காவல் அதிகாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் தற்பொழுது முற்றிலும் செயலிழந்த நிலையில் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பேச முடியாத நிலையில் அவருக்கு நாசியில் பொருத்தப்பட்ட குழாய் வழியாக உணவு செலுத்த வேண்டியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
யூங் மீதான தண்டனை மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்படும்.