மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்: 2023 முதல் 2025 வரை 3,283 பேருக்கு வாகனம் ஓட்டத் தடை

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்: 2023 முதல் 2025 வரை 3,283 பேருக்கு வாகனம் ஓட்டத் தடை

1 mins read
40 பேருக்கு வாழ்நாள் தடை
ce30b620-5f3c-4674-beda-03f1b954021a
3,020 வழக்குகளில் அபராதங்கள் விதிக்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுவரை, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய மொத்தம் 3,283 பேருக்கு வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டது.

சராசரியாக நாளொன்றுக்கு மூன்று பேர் அந்தத் தடைக்கு ஆளாயினர்.

வாகன ஓட்டிகளில் 40 பேருக்கு வாழ்நாள் முழுவதும் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டது. எஞ்சியவர்களுக்கு விதிக்கப்பட்ட சராசரி தடைக்காலம் 38 மாதங்களாகும்.

நாடாளுமன்றத்திற்கு அளித்த எழுத்துபூர்வ பதிலில் மூத்த அமைச்சர் கா. சண்முகம் அந்தத் தகவலைத் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இணைப் பேராசிரியர் ஜேமஸ் ஜெரோம் லிம் கேட்ட கேள்விக்குத் திரு சண்முகம் பதிலளித்தார்.

வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்படும் சராசரி காலம், விதிக்கப்பட்ட அபராதங்கள், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் சிறைவாசக் காலம் ஆகியவை குறித்துத் திரு லிம் கேள்வி எழுப்பியிருந்தார்.

2023 முதல் 2025 வரை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக மொத்தம் 5,176 பேர் கைது செய்யப்பட்டனர். 3,020 வழக்குகளில் அபராதம் விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் சராசரியாக ஏறக்குறைய $5,200 செலுத்த நேரிட்டது.

மொத்தம் 647 குற்றவாளிகளுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட சராசரி தண்டனைக்காலம் 45 நாள்களாகும்.

கைது, தண்டனை தொடர்பான புள்ளிவிவரங்களை நேரடியாக ஒப்பிடமுடியாது என்று திரு சண்முகம் கூறினார். விசாரணைகள், நீதிமன்றச் செயல்முறைகளைத் தொடர்ந்து, குற்றவாளிகள் பிந்தைய ஆண்டொன்றில் தண்டிக்கப்படக்கூடும் அல்லது அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படக்கூடும் என்பதே அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்
மதுபானம்வாகனம்தடை