பிடோக் ரெசர்வோர் ரோட்டில் சாலைத் தடுப்பில் மோதிய வாகனத்தின் ஓட்டுநரைக் காவல்துறை தேடிவருகிறது.
விபத்துக்குப் பிறகு, காவல்துறையினர் வருவதற்கு முன்னரே அந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அதிகாரிகள் மூன்று கத்திகள், இரண்டு மின்சிகரெட்டுகள், போதைப்பொருள் கருவிகள் ஆகியவற்றை காரில் கண்டுபிடித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் காவல்துறை கூறியது.
சம்பவம் குறித்து தங்களுக்கு நவம்பர் 9ஆம் தேதி பின்னிரவு 1.55 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனம், உள்ளூர் கார் பகிர்வு நிறுவனமான ‘கெட்கோ’வுக்குச் சொந்தமானது. ஷின்மின் நாளிதழ் வெளியிட்ட காணொளிப் படத்தில், அந்தக் கார் மோசமாகச் சேதமுற்றதைக் காணமுடிந்தது.
சந்தேகத்துக்குரிய போதைப்பொருள் குற்றச்செயல் மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடமும் மின்சிகரெட் குற்றச்செயல் சுகாதார அறிவியல் ஆணையத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
காவல்துறை விசாரணை தொடர்வதாகவும் காரின் ஓட்டுநரைத் தேடிப் பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறை கூறியது.