செங்காங்கில் அடுக்குமாடி கார் நிறுத்துமிடம் ஒன்றிலிருந்து ஆடை அணியாமல் காரை ஓட்டிச்சென்ற 51 வயது ஆடவருக்கு ஆறு வார சிறைத் தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
காரின் ‘போனட்’ பகுதியில் மற்றோர் ஆடவர் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் காரை ஓட்டியதற்காகவும் சிங்கப்பூரரான சியா ஹியொக் சியாவுக்கு ஓராண்டுவரை கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டது.
ஆடையின்றி காணப்பட்ட சியா குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
2024ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி, செங்காங்கில் உள்ள அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தில் திருவாட்டி வோங் ஷுன்யி என்ற திருமணமான பெண்ணுடன் சியா ஆடையின்றி காருக்குள் இருந்துள்ளார்.
பின்னிரவு 2 மணியளவில் திருவாட்டி வோங்கின் கணவர், திரு கோ யோங் செர்ன் கார் நிறுத்துமிடத்திற்கு வந்து தமது மனைவியும் சியாவும் காருக்குள் இருந்ததைக் கண்டார்.
திரு கோ அப்போது காரைப் பலமாக அடித்ததாகக் கூறிய சியா, எங்கே தம்மை அவர் கடுமையாகத் தாக்கிவிடுவாரோ என்ற அச்சத்தில் அங்கிருந்து காரை ஓட்டிச்சென்றதாகக் கூறினார்.
அப்போது திரு கோ காரின் முன்பகுதியை இறுகப் பிடித்துக்கொண்டார். அப்படியிருந்தும் சியா காரை ஓட்டிச்சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், தமது நடத்தைக்காகவும் நடந்த சம்பவத்திற்காகவும் வருத்தப்படாமல் திரு கோவைச் சியா குறைகூறியதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

