மூன்று பாதசாரிகளை மோதிய பெண் கார் ஓட்டுநருக்கு $3,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதை 35 வயது ஷேரன் லிம் ஸியாங் யூன் ஒப்புக் கொண்டார். விபத்தில் மூன்று பாதசாரிகளில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
திருவாட்டி லிம் அபராதத்தைச் செலுத்திவிட்டார். ஆனால் தண்டனைக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்திருப்பதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025 ஜனவரி 7ஆம் தேதி மாலை 6 மணியளவில் திருவாட்டி லிம், கேஞ்சஸ் அவென்யூ நோக்கிச் செல்லும் ஹவ்லாக் சாலை வழியாக காரை ஓட்டிச் சென்றார். ஆனால் சரியாகக் கவனிக்காததால் சாலையைக் கடந்த மூவர் மீது மோதிவிட்டார்.
திருவாட்டி லிம்மின் காரில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளில் பரபரப்பான சாலையில் மூவர் சாலையைக் கடந்து செல்வது தெரிகிறது.
பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவருக்குப் பல எலும்பு முறிவுக் காயங்கள் ஏற்பட்டன. அவருக்கு 60 நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட காயங்கள் நிரந்தமாக நீடிக்கக் கூடியவையல்ல என்று தெரிகிறது.
லிம்மின் தரப்பில் கவனக்குறைவு இருப்பதைச் சுட்டிக்காட்டிய அரசாங்க வழக்கறிஞர், 5,000 வெள்ளி அபராதமும் ஐந்து ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன்படியே லிம்முக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

