சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில், முறையான அனுமதியின்றி ஆளில்லா வானூர்தியை இயக்கி, பாதுகாக்கப்பட்ட ராணுவப் பகுதிகளைப் படம்பிடித்த 32 வயது தாய்லாந்துப் புகைப்படக் கலைஞர் பிரயுத் ரித்திசாய்போர்ன்குல்லுக்கு $15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று பாசிர் லாபா முகாம், சாஃப்டி ராணுவப் பயிற்சிப் பள்ளி ஆகிய பாதுகாக்கப்பட்ட ராணுவ எல்லைகளுக்குள் இவரது ஆளில்லா வானூர்தி ஊடுருவியது.
இதனைச் சிங்கப்பூர் ஆகாயப் படை கண்டறிந்து, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய சோதனையில் அந்த ஆளில்லா வானூர்தி பறிமுதல் செய்யப்பட்டது. அதில் பாதுகாக்கப்பட்ட ராணுவப் பகுதிகள் தொடர்பான மூன்று காணொளிகள் உட்பட மொத்தம் 18 காணொளிப் பதிவுகள் இருந்தது கண்டறியப்பட்டது.
முறையான உரிமங்கள் இன்றி, அனுமதி இல்லாமல் பாதுகாக்கப்பட்ட வான்வெளியில் ஆளில்லா வானூர்தியை இயக்கிய இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

