சிங்கப்பூர் முழுவதும் ஐந்து நாள்கள் அதிகாரிகள் நடத்திய போதைப்பொருள் ஒழிப்புச் சோதனையில் 78 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 16 வயது மாணவரும் அடங்குவார்.
இவ்வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை (மே 18 - 22) வரை நடத்தப்பட்ட சோதனையில் $200,000க்கும் அதிகமான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) வெள்ளிக்கிழமை (மே 22) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
கஞ்சா, ஹெராயின், ஐஸ், எக்ஸ்டசி போதைப்பொருள்களுடன் எரிமின் - 5 என்னும் போதை மாத்திரையும் இரு போத்தல்கள் திரவ வடிவிலான போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக அது குறிப்பிட்டது.
அந்தப் போதைப்பொருள்கள் அனைத்தும் 1,196 போதைப் புழங்கிகள் ஒரு வார காலத்திற்குப் பயன்படுத்தக்கூடிய அளவில் இருந்ததாகவும் சிஎன்பி அறிக்கை தெரிவித்தது.
அங் மோ கியோ, பிடோக், புக்கிட் பாத்தோக், ஜூரோங் வெஸ்ட், நார்த் பிரிட்ஜ் ரோடு, பொங்கோல் மற்றும் தெம்பனிஸ் வட்டாரங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அண்மையில் போதைப்பொருள் புழங்கி என்ற சந்தேகத்தின் பேரில் 12 வயதுச் சிறுமி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி நார்த் பிரிட்ஜ் ரோடு வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் சிஎன்பி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அங்கு 30 வயது ஆடவரும் 16 வயதுச் சிறுமியும் போதைப்பொருள் புழங்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.

