சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் நான்கு நாள்களுக்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் முறியுடிப்பு நடவடிக்கையில் மொத்தம் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) முதல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) வரை நடத்தப்பட்ட முறியடிப்பு நடவடிக்கையில் 529 கிராம் ஐஸ், 375 கிராம் போதைமிகு அபின், 27 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) இத்தகவலை வெளியிட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோதப் போதைப்பொருள் மதிப்பு 105,000 வெள்ளிக்கும் மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவை, ஒரு வாரத்துக்கு 484 போதைப்பொருள் அடிமைகளுக்கு வழங்கப் போதுமானவை என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
கைதானவர்களில் திங்கட்கிழமை பிடிபட்ட ஆண்கள் நால்வரும் பெண்கள் இருவரும் அடங்குவர். சோதனைகளின்போது சில ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
குறிப்பிட்ட அளவுக்கு மேலான சில போதைப்பொருள் கடத்தியது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடும்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் நடவடிக்கைகளின் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.


