போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 33 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்பர்சன் அருகில் உள்ள பாலாம் சாலையில் உள்ள வீடு ஒன்றில் ஏறத்தாழ 2.7 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அந்த ஆடவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அந்த ஆடவரின் வீட்டிற்குள் திங்கட்கிழமையன்று (ஜூன் 23) தனது அதிகாரிகள் நுழைந்ததாகவும் வீட்டின் பல்வேறு இடங்களில் கஞ்சா கண்டெடுக்கப்பட்டதாகவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) தெரிவித்தது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு $65,000க்கும் அதிகம்.
390 போதைப் பித்தர்களுக்கு ஒரு வாரத்துக்கான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
500 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவைக் கடத்துவது நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.