போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகத்தின்பேரில் சிங்கப்பூரர் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 619,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) இருவேறு இடங்களில் நடத்திய அதிரடிச் சோதனைகளில் அவர்கள் பிடிபட்டதாக மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மார்ச் 4ஆம் தேதி மாலை ஹேவ்லாக் ரோட்டில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 21 வயப்து பெண்ணும் 50 வயது ஆடவரும் போதைப்பொருள் வைத்திருந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் 340 கிராம் போதைமிகு அபின், 103 கிராம் எக்ஸ்டசி, 27 கிராம் ஐஸ், ஐந்து எரிமின் போதை மாத்திரைகள் இருந்தன.
மேலும், அவர்களிடம் 9,180 வெள்ளியும் 711 ரிங்கிட்டும் இருந்தன.
பின்னர் அவர்களின் வாகனத்திலிருந்து 2,758 கிராம் போதைமிகு அபினையும் 515 கிராம் ஐஸையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேநாளன்று, 3 காக்கி புக்கிட் ரோட்டில் உள்ள ஒரு கார் நிறுத்தும் இடத்தில் 27 வயதுப் பெண்ணும் 33 வயது ஆடவரும் பிடிபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஆடவர் 4.99 கிலோகிராம் கஞ்சா, 279 கிராம் கேட்டமைன், 222 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தார்.
பின்னர் அப்பெண்ணின் காரில் 11 கிராம் ஐஸ் இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். விசாரணை தொடர்கிறது.
15 கிராமுக்குமேல் போதைமிகு அபின், 250 கிராமுக்கு மேல் ஐஸ் அல்லது 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தல் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்