மேரிமவுண்ட் வட்டாரத்தில் காரினுள் தூங்கிக்கொண்டிருந்த 38 வயதுப் பெண் போதைப்பொருள், மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து போதைப்பொருள் தொடர்பான பொருள்களும் மின்சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மே 23ஆம் தேதி காலை 8.50 மணியளவில், ஜாலான் மிங்கு சாலையில் சட்டவிரோதமாக வெள்ளை நிறக் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அக்காரின் ஓட்டுநர் இருக்கையில் அப்பெண் தூங்கிக்கொண்டிருந்ததை ரோந்துப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்து அவரை எழுப்பினர்.
காரைச் சோதனையிட்டபோது சந்தேகத்திற்குரிய பொருள்களும் மின்சிகரெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.
அப்பெண்ணைச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துசென்றது.
சம்பவம் நடந்த தினத்தன்று காலை 11 மணியளவில், அந்தக் காரிலிருந்த பொருள்களை எடுத்து காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக சாவ்பாவ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், மோப்ப நாய்கள் சோதனைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
விசாரணை நடைபெற்று வருகிறது.

