டெலிகிராம் செயலியில் ‘வேப்’ எனப்படும் ஆவிநுகரும் மின்சிகரெட் சாதனங்களுக்கான விளம்பரங்களைச் செய்ததாக சமூக ஊடகத்தில் பிரபலமான ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இயுனிஸ் ஜொய் இங் என்ற அந்த 26 வயது மாது டெலிகிராம் செயலியில் மின்சிகரெட்டுகளுக்கான முன்பதிவுகளை ஏற்றுக்கொண்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.
‘மர்மெட் கெர்ல்’ என்ற புனைப்பெயரில் சமூக ஊடகங்களில் இயங்கும் அவர்மீது புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரை ஏறத்தாழ 3,000 ரசிகர்கள் டெலிகிராம் சமூக ஊடகத்தில் பின்தொடர்வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் கண்டறிந்தது.
“வேப் சாதனங்கள் தேவைப்படுவோர் என்னிடம் முன்பதிவு செய்துகொள்ளலாம். அவற்றை உங்களுக்குப் பெற்றுத்தர நான் முயல்வேன்,” என்று ஆங்கிலத்தில் இயுனிஸ் பதிவிட்டிருந்தார்.
சமூக அறிவியல் ஆணையம் அவரது பதிவை விசாரித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்முதல் அரசாங்கம் ‘கேபாட்’ எனப்படும் ‘எட்டோமிடெட்’ போதைப்பொருள் கலந்த மின் சிகரெட்டுகளுக்கு எதிராகச் சட்டங்களை மாற்றியமைத்தது.
அதன் பயன்பாட்டை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்துக்குள் கொண்டுவருவதோடு விற்பனை செய்வோருக்கும் புழங்குவோருக்கும் தண்டனைகளைக் கடுமையாக்குவதும் அவற்றில் அடங்கும்.

