ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷெரில் சான் அரசியலிலிருந்து ஓய்வுபெறுகிறார்.
மக்கள் செயல் கட்சியைச் (மசெக) சேர்ந்த இவர், திங்கட்கிழமை (ஏப்ரல் 21) காலை ஃபேஸ்புக்கில் தமது முடிவை அறிவித்தார். திருவாட்டி சான், இரு தவணைக் காலங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்த பிறகு அரசியலிலிருந்து ஓய்வுபெறுகிறார்.
“மிகவும் கவனமாக ஆலோசித்த பிறகு எனக்குக் கவலை தரும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டில் எனது தந்தை நோய்வாய்ப்பட்டதிலிருந்து எனது பணி சவாலாக இருந்தது. ஓராண்டுக்கு முன்பு அவர் காலமான பின்னர் எனது குடும்பத்துக்கு நேரம் செலவிட முடிவு செய்தேன்,” என்று திருவாட்டி சான் பதிவிட்டார்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திருவாட்டி சான், தமது இடத்தை யார் எடுப்பார் என்பதைத் தெரிவிக்கவில்லை. இவருடன் சேர்த்து வரும் மே மாதம் மூன்றாம் தேதி நடைபெறவுள்ள இவ்வாண்டுப் பொதுத் தேர்தலை முன்னிட்டு ஏழு மசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளனர்.
48 வயது திருவாட்டி சான், தற்போது எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனத்தின் உத்தி, நீடித்த நிலைத்தன்மை குழும அதிகாரியாகப் பதவி வகிக்கிறார்.