தேசிய பாய்மரப் படகோட்ட நிலையத்துக்கு அருகிலுள்ள ஈஸ்ட் கோஸ்ட் பூங்காக் கடற்கரைப் பகுதி திங்கட்கிழமை (ஜூலை 29) மீண்டும் திறக்கப்பட்டது.
ஜூன் 14ஆம் தேதி அப்பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து துப்புரவுப் பணிகளுக்காக அப்பகுதி மூடப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலான நிலையில், அது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மீண்டும் திறக்கப்பட்டுள்ள ‘ஜி’ பகுதியில் ‘கயாக்கிங்’ போன்ற முதன்மை தொடர்பு அல்லாத நீர் விளையாட்டுகளை மீண்டும் தொடங்கலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் திங்கட்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
“கடற்கரையைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. அதேவேளையில், நீச்சல் அடிக்கவோ நீருடன் நேரடித் தொடர்பில் வரும் விளையாட்டுகளில் ஈடுபடவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது,” எனக் கூறிய வாரியம், நீரின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றது.
“நீரின் தரம் வழக்கநிலைக்குத் திரும்பி அது நிலைபெற்ற பிறகே நீர் விளையாட்டுகளை முழுமையாகத் தொடரலாம்,” என்றும் அது சொன்னது.
தேசிய பூங்காக் கழகம் திங்கட்கிழமை வெளியிட்ட வேறொரு ஃபேஸ்புக் பதிவில், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் எஞ்சிய கடற்கரைப் பகுதிகள், அடுத்த அறிவிப்பு வரும்வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவித்தது.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் ‘பி’, ‘இ’ கடற்கரைப் பகுதிகளுக்குப் பொதுமக்கள் செல்லலாம் என வாரியம் ஜூலை 22ஆம் தேதி அறிவித்திருந்தது. ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் நில, கடல் பகுதிகளில் எண்ணெய்க் கசிவின் பெரும்பகுதி அகற்றப்பட்டுவிட்டதாகவும் வாரியம் சொன்னது.
ஜூன் 14ஆம் தேதி, நெதர்லாந்துக் கொடியேந்திய தூர்வாரிப் படகு ஒன்று, சிங்கப்பூர் கொடியேந்திய எண்ணெய்க் கப்பலுடன் மோதியதில், 400 டன் எண்ணெய் கடலில் கசிந்தது.