திறந்த பொருளியல் செழிப்புக்கும் வளர்ச்சிக்கும் மட்டும் அடித்தளம் அல்ல. அது நாடுகளை ஊக்குவிக்கவும் உதவியாக இருக்கும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சனிக்கிழமை (மே 31) கூறியுள்ளார்.
ஆனால் தடையற்ற இந்தச் சந்தைகளில் இடையூறு ஏற்பட்டால் வர்த்தகப் பூசல் திடீர் அதிர்ச்சியாக மாறி வட்டாரத்தைத் தாண்டி பரவக்கூடும் என்று திரு அன்வார் எச்சரித்தார்.
“வர்த்தகம் பெருகும்போது நிலைத்தன்மை பின்தொடரும். அதில் விரிசல் ஏற்பட்டால் வட்டாரத்துக்கு அப்பால் அதன் விளைவுகள் பிரதிபலிக்கும்,” என்றார் திரு அன்வார்.
அவர் ஷங்ரிலா மாநாட்டில் சிறப்புரையாற்றியபோது அவ்வாறு கூறினார்.
அது வட்டாரப் பாதுகாப்பையும் பாதிக்கும் என்ற திரு அன்வார், வர்த்தகம் என்பது தென்கிழக்காசிய உத்திபூர்வ வடிவமைப்பின் ஒரு பகுதி என்றார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த உக்ரேன், காஸா, மியன்மார் ஆகிய போர்களைச் சுட்டிய திரு அன்வார், வரலாற்றில் இது துக்கம் அனுசரிக்கும் தருணம் என்றார்.
அது அரசதந்திரம், பாதுகாப்புக் கட்டமைப்பு எந்த அளவில் உள்ளது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வலுவான வட்டாரம் வெளிப்படைத்தன்மை, ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“ஒரே எண்ணம் கொண்ட பங்காளிகள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அத்தகைய ஒத்துழைப்பு பாலங்களுக்குப் பதிலாக மதில்களை உருவாக்கக்கூடாது, போட்டித்தன்மையை விளைவிக்கக்கூடாது,” என்றார் அவர்.
பெரிய வல்லரசாக இருந்தாலும் நடுநிலையான வல்லரசாக இருந்தாலும் மலேசியா ஒத்த சிந்தனையுள்ளோருடன் பேச தயாராக இருக்கிறது திரு அன்வார் சொன்னார்.
ஒன்றுக்கு ஒன்று விரோதத்தை விதைக்க அல்ல, மாறாக உத்திபூர்வ வெளியை விரிவுபடுத்துவது நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.