சிங்கப்பூரில் காகங்களின் எண்ணிக்கையைச் சமாளிக்க கடந்த சில ஆண்டுகளாக தேசிய பூங்காக் கழகம் தனது முயற்சிகளை அதிகரித்திருப்பதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
காகங்களைப் பிடிப்பது, அகற்றுவது, மரங்களில் கூடுகளை அகற்றுவது ஆகியவை அவற்றில் அடங்கும். தேவைப்படும் இடங்களில் காகங்களின் கூடுகளை அகற்றுமாறு கழகம் நகர மன்றங்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதாகவும் திரு லீ கூறினார்.
குடியிருப்புப் பேட்டைகளில் காகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இவ்வாண்டு பீஷான், சிராங்கூன் போன்ற குடியிருப்புப் பேட்டைகளில் காகங்கள் வழிப்போக்கர்களைத் தாக்கின.
அக்டோபரில் ஆர்ச்சர்ட் சென்ட்ரல் கடைத்தொகுதிக்கு வெளியே இரண்டு காகங்கள் மக்களைக் கொத்தியதைக் காணமுடிந்தது. அதன் காரணமாக, கழகம் அவற்றின் கூடுகளையும் மற்ற இளம் காகங்களையும் அகற்றவேண்டியிருந்தது.
பறவைகளுக்கு இரையிடுவதும், மனிதர்கள் காரணமாக உணவுகள் கிடைப்பதுமே குடியிருப்புப் பேட்டைகளில் காகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணங்கள் என்றார் திரு லீ.
பறவைகளுக்கு இரையிடுவதன் தொடர்பிலான எதிர்மறைத் தாக்கங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க சிங்கப்பூர் உணவு அமைப்பு, தேசிய சுற்றுப்புற வாரியம், நகர மன்றங்கள் ஆகியவற்றுடன் தேசிய பூங்காக் கழகம் இணைந்து செயல்பட்டு வருவதை அவர் சுட்டினார்.


