பயணிகள் திங்கட்கிழமைமுதல் (மார்ச் 16) மே 3ஆம் தேதிவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட பேருந்துகள், ரயில்கள், பத்து ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் நோன்புப் பெருநாள் கருப்பொருளைக் கொண்ட அலங்காரங்களைக் காணலாம்.
அது, நிலப் போக்குவரத்து ஆணையம், மலாய் மரபுடைமை நிலையம், ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’, ‘எஸ்எம்ஆர்டி’, ‘கோ அஹெட் சிங்கப்பூர்’, ‘டவர் டிரான்சிட் சிங்கப்பூர்’ ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சியாகும்.
வட்டப் பாதை, டௌன்டவுன் பாதை, கிழக்கு-மேற்குப் பாதை, வடக்கு-கிழக்குப் பாதை, வடக்கு-தெற்குப் பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ஆகிய ஆறு ரயில் பாதைகளிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் பயணிகள் அந்த அலங்காரங்களைக் காணலாம்.
அதோடு, 30, 51, 67, 147,190, 960, 963 என்ற பேருந்துச் சேவைகளிலும் அந்த அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், புவன விஸ்தா, புக்கிட் பாஞ்சாங், பிடோக், தஞ்சோங் பகார், சிராங்கூன், உட்லண்டஸ், ஊட்ரம் பார்க், தங்சோங் காத்தோங், மரின் பரேட் ரயில் நிலையங்களிலும் அதுபோன்ற அலங்காரங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
அந்த அலங்காரங்கள், ரமலான் இரவுச் சந்தைக்குச் செல்வது, வண்ணமயமான பாரம்பரிய உடைகளில் குடும்பங்கள் காணப்படுவது, அண்டைவீட்டாருடனும் அன்புக்குரியவர்களுடனும் பண்டிகை உணவுகளைப் பகிர்ந்துகொள்வது போன்ற பாரம்பரியங்களைக் கொண்டாடும் அழகிய வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன.
அவை, நோன்புப் பெருநாளின்போது குடும்பம், சமூகம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் ஒற்றுமை உணர்வையும் பிரதிபலிப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
புகிஸ் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்கவிழாவில் கலந்துகொண்ட ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரிஸால், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் ‘ரென்தாக்’ மன்றம், பீட்டி உயர்நிலைப் பள்ளி, ‘வாய்சஸ் அஃப் சிங்கப்பூர் சில்வர் வாய்சஸ்’ (Voices of Singapore Silver Voices) ஆகியவற்றின் படைப்புகளைக் கண்டு களித்தார்.

