பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (இசிடிஏ), விதிமுறை நிபந்தனைகளை மீறியதற்காக பீஷான் வட்டாரத்தில் உள்ள ‘லிட்டில் பேடிங்டன்’ பாலர் பள்ளிக்கு அதிகாரபூர்வ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
லிட்டில் பேடிங்டன் பாலர் பள்ளி, ஜூன் 13ஆம் தேதி அதன் வளாகத்தை மூடியது. அதுபற்றி அதற்கு ஒருவாரத்துக்கு முன்னர்தான் பிள்ளைகளின் பெற்றோருக்கு அது தெரிவித்தது.
முன்னதாக, நில உரிமையாளருடன் உடன்பாடு எட்டப்படாததால் மே 31ஆம் தேதி மூடுவதாக மே 30ஆம் தேதி அந்த பாலர் பள்ளி பெற்றோருக்குத் தெரிவித்திருந்தது.
ஜூன் 2ஆம் தேதியிலிருந்து தாம்சன் வாக் கிளைக்குப் பிள்ளைகள் அனைவரும் மாற்றப்படுவார்கள் என்றும் லிட்டில் பேடிங்டன் பாலர் பள்ளி தெரிவித்தது.
ஜூலை 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இடத்துக்கான ஒத்திகை புதுப்பிக்கப்படாமல் போவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிந்த பிறகும் தன்னிடமும் பெற்றோரிடமும் சரிவரத் தகவல் அளிக்க அந்த பாலர் பள்ளி தவறிவிட்டதாக ‘இசிடிஏ’ அமைப்பு சொன்னது.
“செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக ஆறு மாதங்களுக்கு முன்னரே எழுத்துபூர்வமாக ‘இசிடிஏ’விடமும் பெற்றோரிடமும் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறையை அந்த பாலர் பள்ளி பின்பற்றவில்லை,” என்றும் அறிக்கையில் கூறப்பட்டது.
லிட்டில் பேடிங்டன் பாலர் பள்ளிக்குச் சிங்கப்பூரில் கோவன், தங்ளின், ஈஸ்ட் கோஸ்ட், சிக்ஸ்த் அவென்யூ ஆகியவை உள்பட 10 கிளைகள் உள்ளன.
பாதிக்கப்பட்ட கிளையைச் சேர்ந்த பிள்ளைகள் 16 பேரில் 13 பேர், தாம்சன் வாக் கிளைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதர மூன்று பிள்ளைகளை பாலர் பள்ளியிலிருந்து பெற்றோர் மீட்டுக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
பாலர் பள்ளிகளைத் திடீரென மூடுவது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பல சிரமங்களை ஏற்படுத்தும் என்றும் அமைப்பு சொன்னது. அத்தகைய விதிமீறல்களைக் கண்டிப்புடன் பார்ப்பதாகவும் அது குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தெம்பனிசில் உள்ள நிலையத்தை மூடுவதாக ‘மெடிஸ் லிட்டில் கேம்பஸ்’ நிறுவனம் ஒரு நாளுக்கு முன்னர் பெற்றோரிடம் தெரிவித்தது.
அதையடுத்து பாலர் பள்ளி நிறுவனம் புதிய நிலையங்களுக்கான உரிமங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு ‘இசிடிஏ’ தடை விதித்தது.