எல் நினோ, மற்றும் இந்தியப் பெருங்கடலில் நிலவும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை ஆகிய இரு வேறுபட்ட வானிலை மாற்றங்கள் ஒரே நேரத்தில் உருவாவதன் காரணமாக, வரும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை சிங்கப்பூரில் புகைமூட்ட பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாகத் தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், வரும் ஜூன் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலில் ‘எல் நினோ’ வானிலை மாற்றம் வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக எல் நினோ ஏற்படும் காலங்களில் சிங்கப்பூரில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) மழைப்பொழிவு பெருமளவு குறைந்து, வறண்ட வானிலையும் கடுமையான வெப்பமும் நிலவும்.
இரு மடங்கு பாதிப்பு
இதனுடன் கூடுதலாக, வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியப் பெருங்கடலில் சாதகமான ‘இந்தியப் பெருங்கடல் டைபோல்’ (இந்தியப் பெருங்கடலின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு இடையே நிலவும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையின் ஏற்ற இறக்கம்) நிலவரமும் உருவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக மேகக்கூட்டங்கள் உருவாவது குறைந்து, சிங்கப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் வழக்கத்தை விட அதிக வறட்சி ஏற்படும்.
இந்த இரண்டு இயற்கை வானிலை மாற்றங்களும் ஒரே நேரத்தில் நிகழ்வதால், சிங்கப்பூர் மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் ஜூன் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் வழக்கத்திற்கு மாறான வெப்பமும் வறட்சியும் நீடிக்கும் என்று அறியப்படுகிறது.
இது காடுகளில் தீ விபத்துகள் ஏற்படுவதை அதிகரித்து, எல்லை தாண்டிய புகைமூட்டம் சிங்கப்பூரைப் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே வட்டாரத்தில் நிலவும் இந்த வறண்ட வானிலை மாற்றங்களை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

