தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இணையத்தில் மேற்கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சியினருக்கும் உத்தேச இணைய மிரட்டல்கள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கக்கூடிய இணையச் சம்பவங்களைக் குறைப்பதே இதன் நோக்கம் என்று ஆணையம் தன் இணையத்தளத்தில் தெரிவித்தது.
ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்களில் இணையப் பிரசாரக் கூட்டங்களை நடத்துவது, ‘ஸூம்’ போன்ற தளங்களில் கேள்வி பதில் அங்கங்களுக்கு ஏற்பாடு செய்வது போன்றவை இணையப் பிரசார நடவடிக்கைகளில் சில.
இணையப் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் தேர்தல் ஆகியவற்றின் தொடர்பில், தேர்தல் ஆணையம் ஆலோசனை வெளியிடுவது இது முதல் முறையன்று. 2017லும் 2020லும் இத்தகைய ஆலோசனைகள் வெளியிடப்பட்டன.
உத்தேச இணைய மிரட்டல்கள் குறித்த கூடுதல் விவரங்களும் மேற்கொள்ள வேண்டிய மேலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஆக அண்மைய ஆலோசனையில் உள்ளடங்கும்.
சில நாடுகளில் அரசியல் கட்சிகளையும் தனிமனிதர்களையும் இலக்காகக் கொண்டு பல்வேறு வழிகளில் இணையத் தாக்குதல்கள் நடந்திருப்பதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.
வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், பிரசார அதிகாரிகள் ஆகியோர் இணையப் பாதுகாப்புச் சம்பவம் நடந்திருப்பதாகச் சந்தேகப்பட்டால், அவர்கள் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது.
அவர்கள் தேர்தல் ஆணையத்திடமும் தகவல் தெரிவிக்கவேண்டும்.

