தெம்பனிஸ் விரைவுச்சாலையில் வயது முதிர்ந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதன் தொடர்பில், கார் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலை கிட்டத்தட்ட 11 மணிக்குச் சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில், தெம்பனிஸ் அவென்யூ 10 வெளியேறும் வழிக்கு முன்பாக நடந்த இந்த விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைதெரிவித்தது.
ஏறக்குறைய அதே நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட காவல்துறை, இந்த விபத்தில் ஒரு காரும் ஒரு மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறியது.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட 40 வயது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் விசாரணைகளுக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
80 வயதுடைய அந்த ஆண் மோட்டார் சைக்கிளோட்டி சுயநினைவற்ற நிலையில் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கு அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2025 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மொத்த வாகனங்களில் மோட்டார் சைக்கிள்கள் சுமார் 15 விழுக்காடு மட்டுமே இருந்தாலும், அனைத்து போக்குவரத்து விபத்துகளில் 54.8 விழுக்காடு மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் பின்னிருக்கையில் பயணம் செய்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தங்களது வருடாந்தர சாலைப் போக்குவரத்துப் புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளது.

