தன் மீது காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று 73 வயது மாது ஒருவர் ஒருமாத காலமாக எண்ணியிருந்தார்.
தன் சேமிப்பை மோசடிக்காரர்களுக்கு மாற்றிவிடுவதாகவும் இருந்தார்.
ஆனால், நல்ல வேளையாக மூதாட்டியின் சேமிப்பை அபகரிக்க மோசடிக்காரர்கள் தீட்டிய சதித் திட்டத்தை கிரேட் ஈஸ்ட்டர்ன், ஓசிபிசி வங்கி, காவல்துறை ஆகியவை முறியடித்துவிட்டன.
துப்புரவுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட அந்த மூதாட்டி, அந்த ஒரு மாதமாகச் சரியாகத் தூங்காமல், சாப்பிடாமல் தவித்தார்.
“தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வோரைப் பற்றிய செய்திகளைக் கொண்டு மோசடிக்காரர்கள் என்னை மிரட்டினர். நான் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்தால் என் மகனும் அவ்வாறு தன் உயிரை மாய்த்துக்கொள்வார் என்று கூறினார்கள். அதனால், என் மகனிடம் நான் எதுவும் சொல்லக்கூடாது என்று என்னிடமிருந்து சத்தியம் வாங்கினர்,” என்றார் அந்த மூதாட்டி.
காப்புறுதித் திட்டத்துக்கான $6,000 வழங்குதொகைக்குத் தான் தகுதிபெற்றுள்ளதாக 2023ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியன்று மூதாட்டிக்குக் கடிதம் ஒன்று கிடைத்தது.
அதில் குறிப்பிடப்பட்ட எண்ணில் தொடர்புகொண்ட மூதாட்டி, ‘வங்கிப் பாதுகாப்புப் பிரிவு’ என்று கூறப்பட்ட ஒரு பிரிவுடன் இணைக்கப்பட்டார்.
மூதாட்டிபோல் யாரோ பாசாங்கு செய்து சீனாவில் அவரது கடன் அட்டையைப் பயன்படுத்தி 300,000 யுவான் (S$57,000) செலவழித்துள்ளதாக மோசடிக்காரர்கள் மூதாட்டியிடம் தெரிவித்தனர்.
ஆனால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மூதாட்டிக்குக் காவல்துறையினர் உதவும் என்றும் அந்த மோசடிக்காரர்கள் மூதாட்டிக்கு ஆறுதல் வார்த்தை கூறியிருந்தனர்.
மூதாட்டி தனது காப்புறுதித் திட்டம் ஒன்றைச் சரணடையச் செய்ய வேண்டும் என்று மோசடிக்காரர்கள் கூறிட, அவரும் கிரேட் ஈஸ்ட்டர்ன் அலுவலகத்திற்கு இது தொடர்பாகச் சென்றபோதுதான் அங்கிருந்த அதிகாரி தேவையான நடவடிக்கைகளை எடுத்து மோசடி நிகழ்வதைத் தவிர்க்க உதவினார்.