நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவழித்த விவரங்களை புதன்கிழமை (மே 28) முதல் தேர்தல் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம்.
தேர்தல் பிரசார நிதியில் ஒளிவுமறைவற்ற தன்மையையும் வேட்பாளர்களின் பொறுப்புணர்வையும் உறுதிசெய்ய வேட்பாளர்கள் தாங்கள் செலவழித்த விவரங்களை சட்டப்படி சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகள் அரசிதழில் வெளியிடப்பட்ட 31 நாள்களுக்குள் அவர்கள் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாண்டின் பொதுத் தேர்தல் முடிவுகள் மே 16ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டன.
தற்போது வரை 35 வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை உறுதிமொழியுடன் சமர்ப்பித்து உள்ளதாக தேர்தல் துறை செவ்வாய்க்கிழமை (மே 27) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
வேட்பாளர்களின் சமர்ப்பித்தல்கள் அரசிதழில் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஆறு மாதங்கள் வரை செலவு தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடலாம்.
பண அரசியலைத் தவிர்க்க ஒவ்வொரு வேட்பாளரும் செலவிட வேண்டிய தொகையை சட்டம் நிர்ணயிக்கிறது.
பிரசாரச் செலவுக்கான உச்சவரம்பை அது விதிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
இம்மாதம் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் பதிவுபெற்ற ஒவ்வொரு வாக்காளருக்கும் அதிகபட்சம் $5 என்ற விகிதத்தில் வேட்பாளர்கள் செலவழிக்கலாம் என்ற உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்தத் தொகை $4 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிடும்போது தற்போது இந்தத் தேர்தலில் அது $1 அதிகமானது.

