பிடோக்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றுக்கு வெளியே மின்சைக்கிளால் தீ ஏற்பட்டது.
மின்னேற்றம் செய்யப்பட்டிருந்த அந்த மின்சைக்கிள் தீப்பிடித்துக்கொண்டது.
பிடோக் நார்த் ஸ்திரீட் 1, புளோக் 202ன் 11வது தளத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு வெளியே பிப்ரவரி 13ஆம் தேதி அந்தத் தீச்சம்பவம் ஏற்பட்டது.
தீச்சம்பவம் குறித்து அதிகாலை 3.45 மணிவாக்கில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைந்ததற்கு முன்னரே, பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
புகையை நுகர்ந்ததால் மூவர் சோதிக்கப்பட்டனர். இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஒருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தார்.
மின்னேற்றம் செய்யப்பட்டிருந்த மின்சைக்கிளில் உள்ள மின்கலத்திலிருந்து நெருப்பு தொடங்கியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் காட்டின.
தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான தீச்சம்பவங்களைத் தவிர்க்க, நீண்ட நேரத்திற்கோ இரவு முழுவதுக்குமோ மின்கலங்களை மின்னேற்றம் செய்யவேண்டாம் என்று குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களுக்கு நினைவூட்டியது.