பொதுப் போக்குவரத்து கட்டண உயர்வைச் சமாளிக்க குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவும் பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டு நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் 2024 ஜனவரி 15 முதல் அக்டோபர் 31 வரை இடம்பெறுகிறது.
தகுதிபெறும் ஆனால் முதல் கட்டத்தில் இடம்பெறாத குடும்பங்கள் ஜனவரி 15ஆம் தேதி முதல் https://www.go.gov.sg/ptv என்ற இணையத்தளத்திலோ அல்லது தங்களுக்கு அருகிலுள்ள சமூக நிலையத்தில் நேரில் சென்றோ விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் கடிதங்களைப் பெறுவார்கள்.
பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வைச் சமாளிக்க குறைந்த வருமான குடும்பங்களுக்கு 2023ன் போக்குவரத்துப் பற்றுச்சீட்டு நடவடிக்கையின் கீழ் தலா $50 மதிப்புள்ள பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டு, ஒருவரின் மாத வருமானம் $1,600க்கு மிகாமல் இருக்கும் குடும்பங்களுக்கு கிடைக்கும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, 2023 போக்குவரத்துப் பற்றுச்சீட்டு நடவடிக்கை இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. 2023 டிசம்பரில் நிறைவடைந்த முதல் கட்டத்தின்கீழ், 240,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பற்றுச்சீட்டுகளைப் பெற்றன. அவை 2022 பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டு நடவடிக்கையின்போது பற்றுச்சீட்டுகளைப் பெற்ற, வருமானத் தகுதி வரம்புகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்த குடும்பங்களாகும்.
போக்குவரத்துப் பற்றுச்சீட்டுக்கான கடிதம் பெற்ற குடும்பங்கள், ‘சிம்ப்ளிகோ’ செயலி மூலமாகவோ அல்லது சிம்ப்ளிகோ கூடங்கள், பணம் நிரப்பும் கூடங்கள், உதவி சேவைக் கூடங்கள், சிம்ப்ளிகோ பயணச்சீட்டு அலுவலகங்கள், சிம்ப்ளிகோ பயணச்சீட்டு சேவை மையங்களில் பற்றுச்சீட்டுகளைப் பெறலாம்.
பற்றுச்சீட்டுகள் 2025 மார்ச் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும். மேல் விவரங்களுக்கு குடியிருப்பாளர்கள் சமூக மன்றங்களை அணுகலாம்.