மின்னஞ்சல்கள் மூலம் தனிப்பட்ட வங்கித் தகவல்களைத் திருடும் செயல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு சிட்டிபேங்க் சிங்கப்பூர் வங்கி எச்சரித்துள்ளது.
எடுத்துக்காட்டாக, சிட்டிபேங்கிலிருந்து வரும் மின்னிலக்கப் பாதுகாப்பு ‘டோக்கன்’ என்று சொல்லிக்கொண்டு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சல்கள் போலியானவையாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தங்களின் பெயரைக் கொண்டு தனிப்பட்ட தகவல்களைத் திருடும் நோக்கில் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் குறித்து புகார்களைப் பெற்றுள்ளதாக சிட்டிபேங்க் வியாழக்கிழமை (ஜூலை 2) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
போலி சிட்டிபேங்க் சிங்கப்பூர் இணையத்தளத்தைக் கொண்டு இந்த ஏமாற்றுச் செயல் மேற்கொள்ளப்படுவதாக அந்த வங்கி தெரிவித்தது. அந்த இணையத்தளத்தை அகற்ற நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அது குறிப்பிட்டது.
ஓர் இணையத்தளத்தில் தனிப்பட்ட விவரங்கள் அல்லது வங்கிக் கணக்குத் தகவல்களைப் பதிவிடுவதற்கு முன்பு அந்த இணைய முகவரியைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு சிட்டிபேங்க் அதன் ஃபேஸ்புக் பதிவில் அறிவுரை வழங்கியது. சந்தேகம் தரும் இணைய முகவரிகளுக்குப் போவதையோ சரிபார்க்கப்படாத இணையத்தளங்களில் தனிப்பட்ட தகவல்களச் சமர்ப்பிப்பதையோ தவிர்க்கவேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.
மோசடிக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்று அஞ்சுபவர்கள் சிட்டி செயலி அல்லது சிட்டிஃபோன் ஹாட்லைன் எண்ணான 6225-5225 வழி தங்களைத் தொடர்புகொள்ளலாம் என்றும் சிட்டிபேங்க் தெரிவித்தது.

