வேலைவாய்ப்பு தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 14 பேரை மனிதவள அமைச்சு கைதுசெய்துள்ளது.
சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் ஜூலை 21ஆம் தேதி நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில், நான்கு நிறுவன இயக்குநர்கள், ஒன்பது வெளிநாட்டு ஊழியர்கள், வேலைவாய்ப்பு முகமையின் முக்கியப் பொறுப்பாளர் ஒருவர் ஆகியோர் கைதாகியுள்ளனர்.
போலியான விவரங்களைச் சமர்ப்பித்தது, வேலைவாய்ப்பு தொடர்பான லஞ்சம் பெற்றது, உரிமமின்றி முகமை நடத்தியது ஆகிய குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நிறுவனங்களில் பணிபுரியாத 139 உள்ளூர்வாசிகளுக்குப் போலி மத்திய சேமநிதிச் சந்தா செலுத்தி, வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டை உயர்த்தியதாக இயக்குநர்கள் மீது சந்தேகிக்கப்படுகிறது.
போலி விவரங்களைச் சமர்ப்பித்தால் $20,000 வரை அபராதமும் இரண்டாண்டுகள் வரை சிறையும் விதிக்கப்படலாம். உரிமமின்றி வேலைவாய்ப்பு முகமை நடத்தினால் $80,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
வேலை செய்யாத நிறுவனங்களிடமிருந்து மத்திய சேமநிதிச் சந்தாவைப் பெற வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அமைச்சு நினைவூட்டியுள்ளது.
சந்தேகத்திற்குரிய வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் குறித்து https://www.mom.gov.sg/eservices/services/report-an-infringement என்ற இணையப் பக்கத்தில் புகார் அளிக்குமாறும், விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது.

