மேம்படுத்தப்பட்ட எஸ்ஜிகியூஆர்+ கட்டண முறை விரிவடைவதால் உள்ளூர், வெளிநாட்டு வணிகங்கள் இதன்மூலம் பலனடையலாம்.
உள்ளூர் கட்டணச் சேவை நிறுவனமான நெட்ஸ், சிங்கப்பூரில் எஸ்ஜிகியூஆர்+ முறையை வணிகமயமாக்குகிறது. அதேவேளையில், சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டுள்ள ‘லிக்விட் குரூப்’ நிதித் தொழில்நுட்ப நிறுவனம், எஸ்ஜிகியூஆர்+ முறையை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லவுள்ளது.
எஸ்ஜிகியூஆர்+ முறையின்கீழ், கியூஆர் குறியீடுகள் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் பெறும் வணிகங்கள், நெட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புகொண்டால் போதும்.
நெட்ஸ் மூலம் வணிகங்கள் டிபிஎஸ் பேலா, ஓசிபிசி டிஜிட்டல், UOB TMRW, Alipay, PromptPay போன்ற 17 உள்ளூர், அனைத்துலக கட்டண முறைகளை அணுகலாம்.
எஸ்ஜிகியூஆர்+ நடப்புக்கு வருவதற்கு முன்பு, பலதரப்பட்ட கட்டண முறைகளை ஏற்க விரும்பிய வணிகங்கள், வெவ்வேறு நிதி நிறுவனங்களைக் கையாள வேண்டியிருந்தது.
எஸ்ஜிகியூஆர்+ முறை தீவு முழுவதும் சில்லறை விற்பனை, உணவு பானக் கடைகளில் உள்ள 24,000 முனையங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த மேம்பட்ட கட்டண முறை உணவங்காடிக் கடைகளுக்கு விரிவுபடுத்தப்படும். அதன்படி, எஸ்ஜிகியூஆர்+ முறை சிங்கப்பூரில் 35,000க்கும் அதிகமான முனையங்களில் கிடைக்கப்பெறும்.
2023 நவம்பரில் சிங்கப்பூர் நாணய ஆணையம் நடத்திய ஆய்வு ஒன்றில், எஸ்ஜிகியூஆர்+ கட்டண முறையில் தொடர்ந்து பங்கெடுக்க 75 விழுக்காட்டு வணிகங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன. அதேவேளையில், 86 விழுக்காட்டு நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இது ஆக்ககரமான அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தன.
தொடர்புடைய செய்திகள்
நெட்ஸ் வியாழக்கிழமை (நவம்பர் 7) வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்தக் கட்டண முறையை ஏற்கும் முனையங்களின் எண்ணிக்கையை ஆண்டு அடிப்படையில் 10 விழுக்காடு அதிகரிக்க இலக்கு கொண்டிருப்பதாகக் கூறியது.