மீள்திறனுடன் செயல்படவும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைத் தேடவும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு உதவ எடுக்கப்படும் முயற்சிகளை வலுப்படுத்த என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு (என்டர்பிரைஸ்எஸ்ஜி) திட்டமிட்டுள்ளது.
பொருளியல் சூழலில் நிச்சயமற்ற நிலை நிலவும் இக்காலகட்டத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு முடிவெடுத்துள்ளது.
என்டர்பிரைஸ் சிங்கப்பூர், வெளிநாடுகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யச் சிங்கப்பூர் நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வழங்கப்படும் ஆதரவுகளை அதிகரிக்க இருக்கிறது.
இதற்காக வெளிநாடுகளில் தனது செயல்பாடுகளை அது அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வர்த்தகம் செய்ய இலக்கு கொண்டுள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு அடித்தள ஆதரவு வழங்க, புதிய வெளிநாட்டு நிலையங்களை இயக்கவும் வர்த்தகச் சங்கங்களுடன் இணைந்து செயல்படவும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு முடிவெடுத்துள்ளது.
“தற்போதைய நிலவரப்படி 35 நகரங்களில் அலுவலகங்களை இயக்கி வருகிறோம். இந்த ஆண்டு அமெரிக்காவில் மேலும் இரண்டு அலுவலகங்களைத் திறக்க இருக்கிறோம். தேவை ஏற்பட்டால் பிற நாடுகளிலும் புதிய அலுவலகங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளோம். துபாயிலும் பெங்களூரிலும் இரண்டு புதிய சிங்கப்பூர் என்டர்பிரைஸ்எஸ்ஜி நிலையங்களைத் திறக்க சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்துடன் இணைந்து செயல்பட்டோம்,” என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் லீ சுவான் டெக் புதன்கிழமையன்று (ஜன[Ϟ]வரி 28) தெரிவித்தார். என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் வருடாந்தர செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அவற்றின் வர்த்தகத்தை உருமாற்றி விரைவாகச் செயல்படும் ஆற்றலை மேம்படுத்த உதவுவதில் கவனம் செலுத்த இருப்பதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு கூறியது.
இதற்காக வர்த்தகச் சங்கங்கள் மற்றும் தளவாடங்கள், உற்பத்தி, ஒட்டுமொத்த வர்த்தகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் பயிலரங்குகளை நடத்தியிருப்பதாகத் திரு லீ தெரிவித்தார்.

