சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குப் பராமரிப்புச் சேவை வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இஞ்சினீயரிங் நிறுவனத்தின் (SIAEC) முன்னாள் மேற்பார்வையாளர் ஒருவர் $96,000க்கும் மேற்பட்ட தொகையை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
லியோங் சியூ புய், 2017ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தில் வேலைபார்த்தபோது அவ்வாறு மோசடியில் ஈடுபட்டார்.
சிங்கப்பூரரான அந்த 68 வயது ஆடவர், இதன் தொடர்பில் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை ஜனவரி 28ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
அவருக்குத் தண்டனை விதிக்கும்போது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.
பழுதுபார்ப்புச் சேவை வழங்கியதாகப் பொய்யான தகவல் அளித்தது தொடர்பில் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்தத் தொகையை அவர் முழுவதுமாகத் திருப்பித் தந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
அது தவிர, தான் ஈட்டிய $63,000க்கும் மேற்பட்ட லாபத்தையும் அவர் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
லியோங்கிற்கு பிப்ரவரி 18ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

