கடந்த பிப்ரவரி மாதம் ஜூரோங் ஈஸ்ட் விளையாட்டரங்கில் தஞ்சோங் பாகார் யுனைடட் காற்பந்து அணியின் ரிஸ்கின் அனிக் ரகாய்சத், இரண்டு எதிரணி வீரர்களை முகத்தில் தாக்கினார்.
அதையடுத்து அவர்மீது தற்போது தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி இரவு சிங்கப்பூர் பிரிமியர் லீக்கின் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான போட்டியில் தஞ்சோங் பாகார் யுனைடட் காற்பந்து அணியும் அல்பிரெக்ஸ் நிகாட்டா அணியும் மோதின.
ஆட்டம் முடிந்த பிறகு 9.45 மணிவாக்கில் 20 வயது ரிஸ்கின், அல்பிரெக்ஸ் அணியின் 17 வயது வீரர் ஒருவரின் வாயில் குத்தினார். இதனால் அவருக்கு வாயில் சிறிய அளவில் ரத்தம் வந்தது.
அதேபோல் ரிஸ்கின் மற்றொரு 20 வயது அல்பிரெக்ஸ் அணி வீரரின் முகத்திலும் தாக்கினார்.
இச்சம்பவத்தையடுத்து தஞ்சோங் பாகார் யுனைடட் அணியிலிருந்து ரிஸ்கின் நீக்கப்பட்டார். அவரது ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.
மேலும் ரிஸ்கின், 30 மாதம் காற்பந்து விளையாடவும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் தடை விதித்தது. அவருக்கு 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
ரிஸ்கின் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.