ஆஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்பட்டு சிங்கப்பூரில் விற்கப்படும் ‘கூலிபா ஹர்ப்ஸ்’ என அழைக்கப்படும் சாலட் கீரைகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
அதில், ‘பேசிலஸ் செரியஸ்’ எனும் நுண்ணுயிரி அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறி அளவுக்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து சிங்கப்பூர் உணவு அமைப்பு அதற்குத் தடை விதித்துள்ளது.
அதற்கான அறிவிப்பை வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 21) அமைப்பு வெளியிட்டது.
மண், தாவரங்கள் ஆகியவற்றிலும் பூச்சிகள், பாலூட்டிகள் போன்றவற்றின் குடல் பகுதிகளிலும் காணப்படும் ‘பேசிலஸ் செரியஸ்’, உணவை நஞ்சாக மாற்றும் தன்மை கொண்டது.
‘கூலிபா ஹர்ப்ஸ்’ தயாரிப்பை ஃபிரஷ்மார்ட் சிங்கப்பூர் நிறுவனம் இறக்குமதி செய்கிறது. மீட்டுகொள்ளும் நடவடிக்கைத் தொடர்கிறது.
அந்த உணவுப் பொருளை ஏற்கெனவே வாங்கியவர்கள் அதை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கெனவே, அதை உட்கொண்டவர்கள் தங்கள் உடல்நலன் குறித்து கவலை கொண்டால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறும்படி அது கேட்டுக்கொண்டுள்ளது.

