தைவானுக்கு வருகை தரும் சிங்கப்பூர் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் விரைவாக குடிநுழைவு அனுமதியைப் பெறத் தீவின் விமான நிலையங்களில் உள்ள மின் நுழைவாயிலைப் பயன்படுத்த வியாழக்கிழமை முதல் அனுமதிக்கப்படுவார்கள் என தைவானின் மத்திய செய்தி அமைப்புத் தெரிவித்தது.
பயணிகள் முதலில் குடிநுழைவுச் சேவை முகப்புகளில் தங்கள் கடப்பிதழ், முகங்களின் புகைப்படங்கள், கைரேகைகளைப் பதிவுச் செய்ய வேண்டும்.
தைவானின் தேசியக் குடிநுழைவு அமைப்பின்படி அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி,ஜெர்மனிக்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் மின் நுழைவாயில்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் ஆறாவது நாடாகும்.
முன்பு மின் நுழைவாயிலைத் தைவான் கடப்பிதழ் வைத்திருப்பவர்களும் தைவானில் குடியிருக்கத் தகுதியுடைய வெளிநாட்டவர்களும் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்தப் புதிய சலுகையின் தொடக்கத்தைக் குறிக்கும் விழா வியாழக்கிழமை மாலை தைப்பேயில் நடைபெறும் எனத் தைவானின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்நிகழ்ச்சியில் தைவான், சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.