வாஷிங்டன்: எச்1பி புலம்பெயர்வோர்க்கு இல்லாத விசாக்களுக்கு 100,000 டாலர் (128,000 வெள்ளி) கட்டணம் விதிக்கும் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாக உத்தரவு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) தெரிவித்தது.
வெளிநாட்டைச் சேர்ந்த திறமைமிக்க பணியாளர்களை வேலையில் அமர்த்த விரும்பும் அமெரிக்க நிறுவனங்கள், அரசாங்கத்தின் எச்1பி விசா திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன்மூலம் தொழில்நுட்பம் மற்றும் பிற துறை சார்ந்த வெளிநாட்டு வல்லுநர்கள் சில ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்ற முடிகிறது.
கடுமையான குடியேற்றக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வரும் டிரம்ப் நிர்வாகம், இத்திட்டத்தைக் குறைகூறியதோடு, இதற்கான கட்டணத்தை தற்போதைய 2,000 முதல் 5,000 டாலரிருந்து குறைந்தபட்சம் 1,00,000 டாலராக நிரந்தரமாக உயர்த்த விரும்புகிறார். எனினும், இந்த முயற்சி சட்டம் சார்ந்த சவால்களைச் சந்தித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் விதித்த உயர்கட்டணம் சட்டவிரோதமானது எனக் கூறி, அதனை வசூலிக்க அரசுக்குத் தடை விதித்து ஜூன் மாதம் நீதிபதி வழங்கிய தீர்ப்பை போஸ்டன் நகரிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது.
கட்டண உயர்வுக்குப் டிரம்ப் பிறப்பித்த முதற்கட்ட உத்தரவு, முதன்முதலில் 2025 செபடம்பரில் வெளியிடப்பட்டு 2026 செப்டம்பரில் முடிவடைய இருந்தது.
புதிய எச்1பி விசாவைப் பெறுபவர்களில் பெரும்பான்மையாக உள்ள, ஏற்கெனவே மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டினர்க்கு வழங்கப்பட்ட விசாக்களுக்கோ அல்லது தற்போதைய விசாக்களின் புதுப்பிப்புகளுக்கோ இந்த உத்தரவு பொருந்தாது.
