தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பேருந்து, ரயில் சேவைகள் நேரம் நீட்டிப்பு

2 mins read
4c506c8d-a73c-4ea4-8761-b4f1ad28e99d
18 எஸ்எம்ஆர்டி பேருந்து எண் சேவைகளின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு குறிப்பிட்ட சில பேருந்து, ரயில் சேவைகளின் இயக்க நேரம் மார்ச் 30ஆம் தேதி இரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டி செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) தெரிவித்தது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப் பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் சேவையாற்றும் ரயில்கள் அன்று கூடுதலாக 30 நிமிடங்கள் சேவையாற்றும்.

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் ஜூரோங் ஈஸ்ட், மரினா சவுத் பியர், பாசிர் ரிஸ், துவாஸ் லிங்க் எம்ஆர்டி நிலையங்களை நோக்கிச் செல்லும் கடைசி ரயில்கள் பின்னிரவு 12.30 மணிக்குச் சிட்டி ஹால் எம்ஆர்டி நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

வட்ட ரயில் பாதையில் ஹார்பர்ஃபிரண்ட் எம்ஆர்டி நிலையத்தை நோக்கிச் செல்லும் கடைசி ரயில் இரவு 11.55 மணிக்கு டோபி காட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும். எதிர்த்திசையில் கடைசி ரயில் இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

18 எஸ்எம்ஆர்டி பேருந்து எண் சேவைகளின் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 300, 301, 302, 307, 983A, 901, 911, 912A, 912B, 913, 920, 922, 973A, 181, 240, 241, 243G, 974A ஆகிய பேருந்து எண்கள் அவை.

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனமும் அதன் டௌன்டவுன், வடக்கு - கிழக்கு ரயில் போக்குவரத்து சேவையையும் செங்காங் - பொங்கோல் இலகு ரயில் சேவை நேரத்தையும் நீட்டியுள்ளது. மேலும் அது 17 பேருந்து எண் சேவைகளின் நேரத்தை நீடித்துள்ளது. 222, 225G, 228, 229, 410W, 114A, 60A, 63M, 325, 315, 291, 292, 293, 232, 238, 804, 812 ஆகிய பேருந்து எண்கள் அவை. 

குறிப்புச் சொற்கள்