பயனீட்டாளர்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் உடலுறுதி நிலையங்களின் உடற்பயிற்சி தொகுப்புகளுக்கான முன்பணமாக $20,000க்கு மேல் செலுத்தி அதை இழந்துள்ளனர் என்று சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம் (கேஸ்) தெரிவித்துள்ளது.
முன்பணம் செலுத்துமாறு கேட்கப்படும்போது, மக்கள் அதைத் தீர ஆராய்ந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் கூறினார்.
உடற்பயிற்சி கூடங்கள், உடலுறுதியை மேம்படுத்தும் நிலையங்கள் போன்ற துறைகளில் முன்கூட்டியே பணம் செலுத்தும் முறையில் பாதுகாப்பு விதியை மேம்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கேஸ் முன்கூட்டியே வலியுறுத்தியது எனத் திரு.யோங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்விக்குப் பதிலளிக்கும்போது கூறினார்.
இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை இழக்காமல் அதைச் சிறப்பான முறையில் பாதுகாக்க முடியும் எனவும் அவர் சொன்னார்.
இருப்பினும் உடலுறுதி நிலையத்துடன் உறுப்பினர் தொகுப்புகள் அல்லது தனிப்பட்ட பயிற்சி ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தங்கள் தேவைகளைக் கவனமாகப் பரிசீலிப்பதன் மூலம் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

