பேரங்காடிகளில் திருடுவோரை இன்னும் திறம்பட அடையாளங்கண்டு அத்தகையோரைப் பிடிப்பதற்கு முக அடையாளத் தொழில்நுட்பத்தைத் கண்காணிப்புக் கேமரா கட்டமைப்பில் ஷெங் சியோங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தீவெங்கும் உள்ள 83 ஷெங் சியோங் பேரங்காடிகளில் கிட்டத்தட்ட 50 பேரங்காடிகளில் அந்த முக அடையாளத் தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளது.
பொருள்களுக்குக் கட்டணம் செலுத்தாத சந்தேக நபர்கள் பேரங்காடியைவிட்டு வெளியேறிய பிறகுதான் பெரும்பாலும் அடையாளம் காணப்படுகின்றனர்.
கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பேரங்காடி ஊழியர்கள் அலசிய பிறகே சந்தேக நபர்களின் முக அடையாளங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
அதே சந்தேக நபர் ஷெங் சியோங் பேரங்காடிக்குள் மீண்டும் வரும்போது கண்காணிப்புக் கட்டமைப்பு நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை அனுப்புகிறது.
திருட்டில் ஈடுபட முயலும் சந்தேக நபர்களைக் கண்காணித்து அவர்களை அணுகி திருட்டைத் தடுக்க பேரங்காடி ஊழியர்கள் உதவுகின்றனர்.
சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்ட பிறகே அவர்களின் முக அடையாளங்கள் கண்காணிப்புக் கட்டமைப்பிலிருந்து நீக்கப்படும்.
அந்தக் கட்டமைப்பு சிறப்பாகச் செயல்படுகிறது என்று ஷெங் சியோங் குழுமத் தலைமை நிர்வாகி திரு லிம் ஹொக் சீ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்குமுன் ஒவ்வொரு பேரங்காடியிலும் ஆண்டுதோறும் சராசரியாக நான்கு சந்தேக நபர்களை ஊழியர்கள் பிடிப்பதுண்டு என்ற அவர், முக அடையாளக் கட்டமைப்பு வந்த பிறகு ஒவ்வொரு பேரங்காடியிலும் மாதந்தோறும் எட்டு சந்தேக நபர்கள் பிடிபடுவதைக் குறிப்பிட்டார்.
“இதற்கும் முன் சந்தேக நபர்களின் புகைப்படங்களை அச்சிட்டு எடுத்து ஊழியர்கள் அவர்களை அடையாளங்காண முயல்வர். ஆனால் இப்போது எல்லாம் தானியக்கமாகவும் மின்னிலக்கமாகவும் மாறிவிட்டது,” என்றார் திரு லிம்.
ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய $10,000 மதிப்புள்ள கட்டணங்கள் பேரங்காடிகளில் செல்லுபடியாகாமல் போகிறது என்று அவர் சொன்னார்.
ஷெங் சியோங் முக அடையாளக் கட்டமைப்பை அனைத்து கிளைகளிலும் நிறுவ திட்டமிட்டுள்ளது.