ஜூன் மாதத்திலிருந்து, சிங்டெல் குறுந்தகவல் மோசடியில் குறைந்தது 12 பேர் மொத்தம் $20,000 வரை இழந்திருப்பதாகக் காவல்துறை புதன்கிழமை தெரிவித்தது.
காலாவதியாகப் போகும் சிங்டெல் புள்ளிகளைப் பயன்படுத்தி ‘ஆப்பிள்’ கைக்கடிகாரம் அல்லது ‘ஆப்பிள் ஏர்பாட்ஸ்’ போன்ற வெகுமதிகளை மீட்டுக்கொள்ளச் சொல்லி மோசடிக்காரர்கள் குறுந்தகவல் அனுப்புவர். அதில் போலியான இணையத்தளத்திற்கு இட்டுச்செல்லும் இணைப்பு இடம்பெற்றிருக்கும்.
குறுந்தகவல் அனுப்பப்படும் அதே நாளில் சிங்டெல் புள்ளிகள் காலாவதியாவதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
சிங்டெல் புள்ளிகளுடன் ஒரு சிறு தொகையைச் செலுத்தினால் மட்டுமே வெகுமதியை மீட்டுக்கொள்ள முடியும். அந்தத் தொகை $1ஆகக்கூட இருக்கலாம்.
மோசடியை நம்பி குறுந்தகவலில் இருந்த இணைப்பை அழுத்துபவர்கள் போலியான சிங்டெல் இணையப்பக்கத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அங்கே அவர்களது கடன் அட்டை விவரங்களும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லும் கேட்கப்படும்.
இந்த விவரங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டில் அனுமதியின்றி பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டோர் உணர்ந்தனர்.