ஓஃபிர் ரோட்டில் பெரிய மரம் ஒன்று, ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரி, கார் மீது விழுந்து விபத்தில் மூவர் காயமடைந்தனர்.
வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்த இவ்விபத்தால் அச்சாலையின் ஐந்து வழித்தடங்களிலும் போக்குவரத்து தடைப்பட்டது. பலத்த மழைக்கிடையே ஏற்பட்ட இந்த விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் குறித்த பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
இவ்விபத்து குறித்து மாலை 6.35 மணிக்குத் தகவல் கிடைத்தது எனவும் விபத்து நடந்த இடத்தைச் சென்று பார்த்தபோது சிறிய ரக லாரி ஒன்று மரத்திற்கு அடியில் சிக்கியிருந்தது எனவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
பாரந்தூக்கி உதவியுடன், மரத்திற்கு அடியில் சிக்கியிருந்த லாரியின் ஓட்டுநர் இருக்கையிலிருந்து ஒருவரை மீட்டு அவரை டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அது கூறியது.
லாரியின் முன்பகுதியில் அமர்ந்திருந்த இருவரும் பின்பகுதியில் அமர்ந்திருந்த மற்றொருவரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்குள் தாமாகவே வாகனத்தைவிட்டு வெளியேறினர். லாரியின் முன்பகுதியிலிருந்து இருவரும் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.