தமது முதலாளியின் கணவர் தம்மைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல்துறையிடம் பொய்ப் புகார் அளித்த இந்தோனீசியப் பணிப்பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 14) ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்தப் பணிப்பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சம்பந்தப்பட்ட ஆடவரின் அடையாளத்தைக் காக்க சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பணிப்பெண்ணின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாளியின் கணவருக்கும் அப்பணிப்பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்தது.
இதுகுறித்து முதலாளிக்குத் தெரிந்தால் தமது வேலை போய்விடும் என்ற அச்சத்தில் கள்ளத் தொடர்பை முடிவுக்குக் கொண்டு வர பணிப்பெண் முடிவெடுத்தார்.
கள்ளத் தொடர்பை முடிவுக்குக் கொண்டு வர முதலாளியின் கணவருக்கு எதிராக அவர் பொய்ப் புகார் அளித்தார்.
சம்பந்தப்பட்ட குடும்பம் அப்பணிப்பெண்ணை 2023ஆம் ஆண்டு மே மாதம் வேலையில் அமர்த்தியது.
பணிப்பெண்ணுக்கும் முதலாளியின் கணவருக்கும் இடையே 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கள்ளத் தொடர்பு தொடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
முதலாளியின் கணவருடன் தமக்கு இருந்த கள்ளத் தொடர்பை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்று தெரியாமல் தமது கட்சிக்காரர் பொய் கூறியதாக அப்பணிப்பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
தமது கட்சிக்காரர் கூறிய பொய் நீண்டகாலத்துக்கு நீடிக்கவில்லை என்பதால் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
பணிப்பெண்ணின் செயலால் சம்பந்தப்பட்ட ஆடவர் கைது செய்யப்படவில்லை என்பதை வழக்கறிஞர் சுட்டினார்.
அரசாங்க ஊழியரிடம் பொய்த் தகவல் அளித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.